தூபிகளுடன் இணைந்த வரலாற்று ரீதியான கட்டிடங்கள் -Combined Historical Buildings of Stupas

 இலங்கையின் கற்செதுக்கல் வேலைப்பாடுகள்

    மகிந்தனின் வருகையின் பின்னர் பௌத்த மனை நிர்மாணக்கலையில் அபிவிருத்தியொன்று ஏற்பட்டது. அனுராதபுர நகரத்தில் பிரிவேனாக்கள், விகாரைகள், பிரசவமனைகள், மருத்துவச்சாலைகள், தானசாலைகள், விகாரைகள், சந்தைகள் போன்ற பல கட்டடங்கள் கட்டப்பட்டன. அனுராதபுரக் காலத்தில் கட்டப்பட்ட இக் கட்டடங்களை அலங்கரிக்க செதுக்கல் கலையை பயன்படுத்தியுள்ளனர். தேவநம்பியதீஸ்ஸன், வலகம்பா, துட்டகைமுனு, சத்தாதிஸ்ஸ போன்ற அரசர்கள் அனுராதபுரக்கால மனைநிர்மாணம் கலை நுட்பங்கள் என்பவற்றை விருத்தி செய்தனர். அதற்கு அரச ஆதரவும் வழங்கப்பட்டது. விசேடமாக துட்டகைமுனு, மகாசேனன் போன்றவர்களின் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள், கலை நிர்மாணங்கள், கலை நுட்பத்துடன் சிங்களக் கலை இயல்புகளைக் கொண்டுள்ளது. அக்காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே தொடர்புகள் காணப்பட்டமையினாலும், புத்த சமயம் கொண்டுவரப்பட்டமையாலும் இந்தியச் செதுக்கற் கலை அம்சங்கள் அனுராதபுரச் செதுக்கலில் பெருமளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை நம் நாட்டுச் செதுக்கலில் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் ஒழுங்கமைத்துக் கொள்வதில் சிங்களச் சிற்பிகள் கவனமாக இருந்தார்கள்.

தூபியுடன் ஏனைய வரலாற்று
ரீதியான கட்டிடங்கள்

பௌத்த மத வருகையின் பின் சிங்களச் செதுக்கல் சிற்பியின்     புதுமையான நிர்மாணச் சக்கியை எடுத்துக்காட்டும் பல கட்டிடக் கலைப்படைப்புக்கள் இலங்கையில் தோன்றின. அவையாவன வாகல்கடம், சந்திரவட்டக்கல், காவற்கல், படிவரிசை, கொறவக்கல், புன்கலசம் என்பனவாகும்.

வாகல்கடம்

    தாதுகோபத்திற்குச் செல்லும் நான்கு பக்க வாசல்களுக்கும் எதிராக அண்டத்துடன் அண்டியதாக அதன் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் செதுக்கல் வேலைப்பாடு கொண்ட அமைப்பாகும். இதனை புராதன காலத்தில் ஆதிமுக, ஆயக்க என்ற பெயர்களால் அழைக்கப்படும். இந்தியாவின் சாஞ்சி தூபியின் நான்கு வாசல்களிலும் உள்ள அலங்கார வேலைப்பாடமைந்த தோரணங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு பதிலாக இலங்கையில் தாதுகோபத்தின் நான்கு திசைகளிலும் விமானங்கள் அமைக்கப்பட்டன. அவையே வாகல்கடங்கள் ஆகும். 

    இவ்வமைப்பானது இலங்கையில் மாத்திரமே காணப்படுகின்றது. தாதுகோபத்தின் அழகுக்காகவும் முக்கியமாக அதன் பகுதியான அண்டத்தின் பலத்திற்காக இது அமைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. அடிப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி செங்கல்லாலும் ஆக்கப்பட்டதை அவதானிக்கலாம். இவ் வாகல்கடம் அமைக்கும் வழக்கம் எப்போது ஆரம்பமானது என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. 

வாகல்கடம் பிரதானமாக மூன்று தொகுதிகளைக் கொண்டதாகும். முதலாவதாக இரு பக்கமும் அழகிய செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட இரு தூண்கள் உள்ளன. இத் தூண்களில் கலசத்தில் இருந்து வெளிவரும் கொடிகள் போன்று செதுக்கப்பட்ட ஐPவன விருட்சம், நாக உருவங்கள், தேவதை உருவங்கள் என்பன காணப்படும். இத் தூண்களின் உச்சியில் மிருக உருவங்கள் காணப்படும். இவை நான்கு திசைகளைக் காட்ட உருவாக்கப்பட்டதாக கருதப்படுகின்றது. யானை – கிழக்கு, குதிரை – மேற்கு, சிங்கம் - வடக்கு, எருது – தெற்கு ஆகும்.

    இரண்டாவது கல்லால் ஆன செவ்வக வடிவப்பகுதியாகும். அதன் மத்திய பகுதி முன்துருத்தியவாறு காணப்படும். இதில் கிடைப்பக்கமாகவுள்ள மணியுருக்கட்டு (பொரதம்) உருவங்கள் கொண்டதாக உள்ளன. இதில் வரி வரியாக அழுத்தமாகவும், நுட்பமாவும் அமைக்கப்பட்ட செதுக்கல் வேலைப்பாடுகளைக் காணமுடியும். இச் செதுக்கல் வேலைப்பாடுகளில் பின்வருவன முக்கியமானதாகும். யானைச் செதுக்கல், பேகட அமைப்பு, வாமன உருவம், லியவெல செதுக்கு வேலை என்பனவாகும். வாகல்கடங்களின் இச்செவ்வகப் பகுதிகள் முழுவதும் கற்களால் அமைக்கப்பட்டிருக்கும். 

    மூன்றாவது செவ்வகப் பகுதிக்கு மேல் காணப்படும் 3 விமானங்கள் ஆகும.; இவ் விமானங்களின் மத்தியில் உள்ள விமானம் பெரிதாகவும் இரு பக்கமும் உள்ளவை சிறியதாகவும் காணப்படும். இவற்றினுள் தேவ உருவங்கள் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. விமானங்கள் செங்கற்களால் கட்டப்பட்டன. இதனால் இன்று காணப்படும் வாகல்கடங்களில் சில மேற்பகுதி அழிந்துவிட்டன. இதனால் வாகல்கட அமைப்பில் மேல்பகுதி பற்றிய விடயங்கள் அறிதல் கடினமானது. அவை செங்கற்களால் கட்டப்பட்டமையால் உடைந்து சிதைவடைந்துள்ளது. எனினும் மிரிஸ்ஸவெட்டிய, அபயகிரிய, ஜேதவனராம என்பவற்றின் மூலம் அதிகமான விடயங்களை அவதானிக்க கூடியதாக உள்ளது.

    வம்சக்கதைகளில் வாகல்கடம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை எனினும், 1ம் கஐபாகு மன்னன் இவ்வமைப்பை அபயகிரியில் செய்ததாக மகாவம்சம் கூறுகின்றது.

அநுராதபுரத்தில் மிகுந்தலையில் எழுந்த அதிகமான தூபிகளில் வாகல்கடம் முன்பாக கல்லால் செய்யப்பட்ட பூசைப் பீடம் ஒன்றும் பிற்காலத்தில் கட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பூக்களை வைத்து வழிபட்டனர். இது மலர்மேடை அல்லது பூப்பீடம் என அழைக்கப்பட்டது. 

 அநுராதபுரம் மிரிசவெத்தி, மிகிந்தலை கந்தகசைத்திய, ரூவன்வெலிசாயா தாதுகோபங்களில் மிகப் பழைய வாகல்கடங்கள் காணப்படுகின்றது. இதில் மிகிந்தலை கந்தகசைத்திய வாகல்கடமே மிகச் சிறந்ததாகும்.

மிகிந்தலை கந்தக சைத்திய வாகல்கடம்

    மிகிந்தலை கந்தக சைத்தியத்தில் (தூபி) உள்ள கிழக்குப்புறத்திலுள்ள வாகல்கடமே தற்போது எஞ்சியிருக்கும் மிகப்பழையதும் கலை வேலைப்பாடுமிக்கதுமான வாகல்கடமாகும். கண்டக சைத்தியத்தின் மணியுருக்கட்டு (பொரதம்) அமைப்புகளுக்கிடையே கலையம்சத்துடனான (குள்ளர்) முயலகர்கள் காணப்படுகின்றனர். கிழக்கு வாகல்கடத்தின் வலப்புறத்தில், முயலகன் மத்தியில் பிள்ளையார் உருவம் பொழியப்பட்டுள்ளது. அவ்வுருவின் இரு புறத்தில் இருக்கும் முயலகன் பிள்ளையாரை நமஸ்காரம் செய்யும் விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

முயலகன் உருவங்களுக்குக் கீழே அன்னங்களின் உருவங்கள் ஒரு வரிசையும் கீழ்ப் புறத்தில் தலை முன்னங்கால்களைக் கொண்ட யானை உருவங்களும், மணியுருக்கட்டுகளிடையே வரிசையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

ரூவன்வலிசாயா வாகல்கடத்தின் கீழ்ப்பகுதி (விமானம் உடைந்து விட்டது)

வாகல்கட செதுக்கலும் இந்திய செதுக்கற்கலை சம்பிரதாயம் பற்றிய ஒப்பீட்டு விமர்சனம்

    இந்தியாவில் லும்பினி தூபிகளிலும் இதற்குச் சமனான விலங்குருவங்களும் இருந்ததாகக் ஹிகொசொங் குறிப்பிடுகிறார். அசோகத்தூண்களின் செதுக்கல்கள் வாயில்களில் காணப்படுவதாக பரணவிதான கூறுகிறார். வாயில்களில் காணப்படும் சைத்தியங்களின் பலகணியில் உள்ள வேலைப்பாட்டு உருவங்கள் குஷான யுகத்திற்குரிய இந்திய நிர்மாண அலங்காரங்களுக்குச் சமமானவை எனவும் வாயிற் செதுக்கல்கள் அமராவதி கலையை நினைவுக்கு கொண்டு வருகின்றன எனவும் கலாநிதி பரணவிதான கூறுகிறார். இந்தியாவில் உள்ள தூபிகளில் காணப்படும் மேடை அலங்கரச் செதுக்கல்கள் வாயிற் செதுக்கல்களுக்குச் சமமானவையாக இருக்கின்றன. 



சந்திரவட்டக்கல்

    சந்திரவட்டக் கல்லானது சிங்களக் கலைஞர்களின் சிரேஸ்ட நிர்மாணமாகும். இவை அரண்மனைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றின் வாசலில் படிக்கட்டு ஆரம்பிக்கும் முதல் படியாக காணப்படும் செதுக்கல் கொண்ட அரைவட்டவடிவப் படிக்கல்லாகும். இதனை சூரிய சந்திரக்கல், ஆரோக சந்திர, பத்மசீலா, சந்திரகாந்தக்கல் என்னும் பெயர்களால் ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டது. 

    இது முதலில் சதுரவடிவில் இருந்து காலம் செல்லச் செல்ல அதன் பயனை இலகுவாக்கும் வகையில் அந்தங்கள் வட்டமாக்கப்பட்டுள்ளன. அலங்காரத்திற்கும் பாதுகாப்புக்குமாக பிற்காலத்தில் அது அரை வட்டவடிவான தன்மையில் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆரம்ப நாட்களில் காணப்பட்ட படிக்கல் சதுரமாக இருந்து பின்னர், அரைவட்டவடிவான சந்திரவட்டக்கல் முதலில் உருவங்கள் எதுவுமின்றி நிர்மாணிக்கப்பட்டது. பின்பு ஒரு மையத்தில் இருந்து ஐந்து கீலங்களாக பிரிக்கப்பட்டு அரைவட்ட இரேகைகளுக்குள் அலங்காரங்கள் செதுக்கப்பட்டது. பின்னர் பூவிதழ்களின் செதுக்கல்கள் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து உருவவரிசைகள் சேர்க்கப்பட்டன. காலம் செல்லச் செல்ல உருவ வரிசைகளின் அளவு கூடியது. அரைவட்டத்தினுள் உருவங்கள் திட்டமிட்டு செதுக்கப்பட்டுள்ளது. அவ்வரிசையில் பறவைகள், விலங்குகள், கொடிகள், தீச்சுவாலைகள் போன்றவையும் சேர்க்கப்பட்டன. சந்திரவட்டக்கல்லின் செதுக்கல்களில் அதிகமானவை அரைப்புடைப்புச் சிற்பமாக உள்ளன. ஆழமாக ஆக்கப்பட்ட உருக்களும் சில சந்திரவட்டக் கற்களில் காணலாம். சந்திவட்டக் கல்லின் செதுக்கல்களில் உள்ள உருக்கள் மிக எளிமையானவை. இலகுவானவை சிக்கலற்றவை. செதுக்கலுக்கேற்ற உருக்களே மிகப் பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளன. இவை இயற்கையாகவும் உயிர்த்துடிப்புடையவையாகவும் இருப்பதைக் காணலாம். மிருகங்களை வடிவமைக்கும் போது நிறைவுடனும் அசைவுடனும் செயற்படும் விதத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இதற்கெனப் பயன்படுத்தப்பட்ட சிங்கம் மற்ற விலங்குகளை விட உயிர்த் துடிப்புள்ளதாகக் காணப்படுகின்றது. 

சந்திரவட்டக்கல் செதுக்கல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட அலங்காரங்கள் கேத்திர கணித அமைப்பின் படி நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பழைய சந்திரவட்டக்கற்களில் சமாந்தரமான அலங்காரங்கள் கொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்தியில் பூவிதழ்களைக் கொண்ட ஒரு பட்டியுள்ளது. சந்திவட்டக்கல்லின் மத்திய பகுதி ஏனைய பகுதிகளை விட மேலாக அமைந்துள்ளது. 

இச் சந்திரவட்டக்கல் செதுக்கலில் உள்ள அலங்கார வடிவங்கள் பௌத்த மத எண்ணக்கருக்கள் கொண்ட குறியீட்டு ரீதியாக பல அர்த்தங்களைக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவற்றின் 6 பகுதிகளும் அதன் பொருளும் கீழே தரப்பட்டுள்ளது.


1. தீச்சுடர் - பேராசை,ஆசை,குரோதம்

2. யானை, குதிரை, சிங்கம், எருது - வயோதிபம், நோய், மரணம், ஐhதி

3. கொடி அலங்காரம் - பேராசை எனும் பிணைப்பு

4. ஹன்சாவலிய (அன்னப்பட்சி) - பேராசையைப் புத்தியால் தவிர்த்தல்

5. கொடியலங்காரம் - பேராசை எனும் பிணைப்பு

6. அரைத்தாமரை - முக்தி நிலையைப் பெற்றுக்கொள்ளல்.


அநுராதபுரக்காலச் சந்திரவட்டக்கல்

    அநுராதபுரக்காலச் சந்திர வட்டக்கற்கள் பொலனறுவைக்காலச் சந்திரவட்டக்கற்களை விட சிறப்பானதும் நேர்த்தியானதுமாகும். இக்காலப்பகுதிக்கான சந்திரவட்டக்கற்கள் குப்த மரபில் அமைக்கப்பட்டன. இவை நடுவில் அரைத்தாமரை வடிவத்தையும் அடுத்த வரிசையில் சொன்டினால் கௌவியபடி செல்லும் அன்னப்பட்சியையும் அடுத்து இலை,கொடி அலங்காரத்தையும், அடுத்து யானை,குதிரை,சிங்கம்,எருது ஆகியன ஒன்றையொன்று துரத்துவது போன்ற மிருகவரிசையையும் இறுதியில் தீச்சுடரும் காணப்படுகின்றது. மிருகவரிசையில் ஓட்டமும் அசைவும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது. 
    சந்திரவட்டக்கல் செதுக்கல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட அலங்காரங்கள் கேத்திர கணித அமைப்பின் படி நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பழைய சந்திவட்டக்கற்களில் சமாந்தரமான அலங்காரங்கள் கொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்தியில் பூவிதழ்களைக் கொண்ட ஒரு பட்டியுள்ளது. சந்திவட்டக்கல்லின் மத்திய பகுதி ஏனைய பகுதிகளை விட மேலாக அமைந்துள்ளது. ஆனால் அநுராதபுரத்தின் பெருமளவு சந்திரவட்டக்கற்கள் பல அளவுகள் குறைந்த ரேகைகள் பயன்படுத்தப்பட்ட கொடிச்செதுக்கல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 



    அநுராதபுரக்காலத்திற்குரிய அலங்கார சந்திர வட்டக்கற்கள் சில பின்வரும் இடங்களில் உள்ளன.
1. அநுராதபுரம் இராணி(பிசோ) மாளிகையில் (மகாசென் மாளிகை) உள்ள சந்திரவட்டக்கல்
2. அபயகிரி விகாரை உள்ள சந்திரவட்டக்கல்
3. வசபக்குளத்திற் கண்மையில் உள்ள கட்டிடமொன்றில் உள்ள சந்திரவட்டக்கல்
4. தூபராமைக்கு அண்மையில் உள்ள மகாமேகவன உயன்னாவில் உள்ள சந்திரவட்டக்கல்
5. ஹீ மகாபோதி (வெள்ளரசு மரம்) அருகில் உள்ள சந்திரவட்டக்கல்.
6. அனுராதபுரக்கால தலதாமாளிகை வாசல் உள்ள சந்திரவட்டக்கல்.
மேற்கூறிய சந்திரவட்டக்கற்கள் அளவில் சமமானவை அல்ல. அளவில் செதுக்கலில் வேறுபட்டவை. 
சாதாரணமாக சந்திர வட்டக்கல்லின் அந்தத்தில் உள்ள வட்டத்தில் காணப்படும் தீச்சுவாலைச் செதுக்கல் ஸ்ரீ மகாபோதி விகாரையின் சந்திரவட்டக்கல்லின் மத்தியில் உள்ள தாமரைக்கு அருகில் செதுக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் வரிசைச் செதுக்கல் ஆரம்பமாகும் இடமும் முடிவுறும் இடமும் சகலவற்றுக்கும் 2ம் இடத்திலும் யானையொன்றின் உருவத்தைக் காணக்கூடியதாக உள்ளது. குதிரை உருவம் இரண்டை மட்டும் காணக்கூடியதாகவுள்ளது. இச் செதுக்கலில் சிங்க உருவங்கள் காணப்படவில்லை. 
ருவன்வெலிசாயாவிற்கும் வசவக்குளத்திற்கும் இடையில் காணப்படும் கட்டடமொன்றில் உள்ள சந்திரவட்டக்கல்லில் 4 விலங்குருவங்களும் இரு தடவையும் மேலும் ஒரு யானை உருவமும் அமைக்கப்பட்டுள்ளது.  அதில் அன்ன வரிசையொன்று சொண்டினால் எதுவும் சுமக்காத வகையில் செதுக்கப்பட்டுள்ளது. 
அனுராதபுரக்கால தலதாமாளிகையில் உள்ள சந்திரவட்டக்கல்லில் உள்ள செதுக்கல்கள் அந்தளவு வித்தியாசமாக இல்லாவிட்டாலும் கலைப்படைப்புகளில் ஒர் உயர்தரமான நிர்மாணமாக அதன் மத்தியில் உள்ள தாமரை இதழ்களைக் கொண்டுள்ள விதம் மிகத்தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளது. அதில் செதுக்கப்பட்ட கொடிவரிசை மெல்லியது. அதில் உள்ள அன்னங்கள் எதனையும் சுமக்காது உள்ளன.
வேறு இடங்களில் காணப்படாத கொடிச் செதுக்கல்களை ருவன்வலிசாயாவிற்குப் பின்னாலுள்ள மண்டபத்தில் காணலாம். அருகிலுள்ள மற்றைய செதுக்கல்கள் அநேக இடங்களில் காணப்படும் செதுக்கல்களுக்குச் சமமானது.
அநுராதபுரக்காலச் சந்திரவட்டக்கற்களில் மிகச் சிறந்தது அநுராதபுர இராணி மாளிகை சந்திரவட்டக்கல் ஆகும். இது அநுராதபுரக்காலக் கலைஞர்களின் கலை நுட்பத்தையும், உயிர்த்துடிப்பான சிற்பத்திறனையும் எடுத்துக் காட்டுகின்றது. இச் சந்திரவட்டக்கல்லின் மத்தியில் அரைவாசித் தாமரை ஒன்றுள்ளது. அதைச் சுற்றி மத்தியை நோக்கி 5 வரிசைகள் இருக்கின்றன. அருகிலுள்ள வரிசையில் சொண்டினால் தாமரைமொட்டுக்கள் மூன்றைக் கவ்விக் கொண்டுள்ள அன்னங்களைக் கொண்ட கொடியொன்றும் அடுத்த வரிசையில் சிக்கலான கொடியொன்றும் அடுத்த வரிசையில் ஒன்றோடொன்று பிணைந்து செல்லும் யானை, சிங்கம், குதிரை, எருது போன்ற நான்கு விலங்குகளும் கடைசி வரிசையில் தீச்சுவாலையின் செதுக்களையும் கொண்டும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.         

பொலனறுவைக்காலச்  சந்திரவட்டக்கல்

    பொலனறுவைக்காலச் சந்திரவட்டக்கல்லானது தோற்றத்திலும் பருமனிலும் அனுராதபுரச் சந்திரவட்டக்கல்லுக்குச் சமனானது. ஆனால், இவை வௌ;வேறு இடங்களில் வேறுபட்ட அலங்காரங்களைக் கொண்டதாக உள்ளது. செதுக்கல் வடிவங்களும் எளிமையானவை. 
                                        இச் சந்திரவட்டக்கல்லில் உள்ள செதுக்கல்களாக நடுவே அரைத்தாமரையும் அடுத்து கொடியலங்காரமும் அடுத்து குதிரை வரிசையும், அடுத்து யானை வரிசை, அடுத்து அன்னப்பட்சி கொண்ட அலங்காரமும் இறுதியில் தீச்சுடரும் செதுக்கப்பட்டுள்ளது. 
அநுராதபுரக்கால சந்திரவட்டக்கல்லில் வெளிவரிசையில் இருந்த தீச்சுவாலை பொலனறுவைக் காலத்தில் கூடுதலாக உள்வரிசையில் செதுக்கப்பட்டுள்ளது. அன்னக்கொடி வரிசையை முதல் வரிசைக்கு பயன்படுத்திய சந்திரவட்டக்கற்களும் உண்டு. 
         பொனறுவைக்காலச் சந்திரவட்டக்கல்லுக்கும் அனுராதபுரக்காலச் சந்திரவட்டக்கல்லுக்கும் இடையில் வேறுபாடகவுள்ளவை பொலனறுவைச் சந்திரவட்டக்கல்லில் மிருகவடிவங்கள் தனி வரிசையாக செதுக்கப்பட்டுள்ளமையும், எருது மற்றும் சிங்க வடிவங்கள் காணப்படாமையும் ஆகும். எருது வடிவம் நீக்கப்பட்டமைக்கான காரணம் அக் காலத்தில் நிலவிய சோழர் ஆட்சி ஆகும். சோழர் இந்து சமயத்தவர் இந்துமதத்தின் புனித சின்னம் எருதாக இருப்பதால் நீக்கப்பட்டது. 
        பொலனறுவை வட்டதாகே வாசலில் காணப்படும் சந்திரவட்டக்கற்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை. பொலனறுவை வட்டதாகேயில் உள்ள உருவங்கள் இட நெருக்கடி குறைவாகவுள்ளது. வட்டதாகேயின் ஒரு சந்திரவட்டக்கல்லில் தீச்சுவாலை வட்டத்தோடு உள்ள பகுதியில் அன்னக்கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. விலங்குருவங்கள் ஒவ்வொரு வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை இடப்புறத்தில் இருந்து வலப்புறமாக ஓடுவது போல் செதுக்கப்பட்டுள்ளது. இதில் சூலகம் அற்ற ஒரு தாமரை உள்ளது. இன்னுமொரு சந்திரவட்டக்கல்லில் அன்னக்கொடி விலங்கு வரிசையொன்றும் இலைக்கொடி செதுக்கலொன்றும் காணப்படுகின்றது. அதில் முதலாவது குதிரை வரிசையாகும். அடுத்து யானைகளும் பின் இலைக்கொடியும் கல்லின் அடிவாரத்தில் அதாவது கரைப்பகுதியில் இலைக்கொடியினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
                                பொலனறுவைக் கிரிவிகாரையின் வடக்கு வாயில் உள்ள சந்திரவட்டக்கல்லின் செதுக்கல் எளிமையான செதுக்கல்கள் அதிகமானவை. ராஜவைஷ்ய பூசாரி மண்டபத்திலுள்ள சந்திரவட்டக்கல்லும் முன்கூறிய சந்திரவட்டக்கல்லுக்குச் சமமாக இருப்பினும் செதுக்கல்களைப் பொறுத்தவரை தரமானவை எனக் கொள்ள முடியாது. 
    பொலனறுவை அட்டதாகே சந்திரவட்டக்கல் வடிவம் அரைவட்டத்திலும் அதிகமானது, விலங்குருவங்களை நெருக்கமாக அமைத்துள்ளனர். யானை, குதிரை, சிங்கம் போன்ற உருவங்களுடன் நடுவில் சூலகம் அற்ற ஒரு தாமரை மட்டுமே உள்ளது. 



கண்டிய காலச் சந்திரவட்டக்கல்

        கண்டிக்காலத்தின் விகாரைகள், அரண்மனைகளில் அமைந்த சந்திரவட்டக்கல்லானது வடிவம், அமைப்பு என்பவற்றின் நிர்மாணத்தில் வேறுபட்டதாக முக்கோண வடிவில் அமைந்துள்ளது. சந்திரவட்டக்கல்லின் நிரைகள் நீக்கப்பட்டு மத்திய பகுதியில் தாமரை மலர் முழுமையாக பொழியப்பட்டுள்ளது. விலங்குகளிற்குப் பதிலாக கொடி பின்னல் அலங்காரங்கள் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. கண்டிக் காலத்தில் செதுக்கலில் ஈடுபட்ட சிற்பிகளுக்கு தமது விருப்பப்படி புதிய அலங்காரங்களை உபயோகித்து நிர்மாணிக்கும் சுதந்திரம் இருந்துள்ளதாக நினைக்கத் தோன்றுகின்றது. 
    எல்லாச் சந்திரவட்டக்கல்லிலும் இரு புறங்களிலும் சோளக்கதிர் மற்றும் கொடிச்(லியவெல) சிற்பவேலைப்பாட்டினைக் காணலாம். சந்திரவட்டக்கல்லின் மத்தியில் தாமரைப்பூவுக்குப் பதிலாக வட்டவடிவமாக இதழ்கள் செதுக்கப்பட்டுள்ளது. மத்தியில் உள்ள விட்டத்தைச் சுற்றியுள்ள கோடுகளில் மரச்செதுக்கல் கொடிகளிலான அலங்காரங்களைக் காணலாம். இக்காலச் சந்திரவட்டக்கல்லில் கோளவடிவான தொடர் அலங்காரவடிவங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. சந்திரவட்டக்கல்லின் முடிவிடங்களின் இருபுறமும் சிறிய வட்டவடிவமான அலங்கார அமைப்பு உள்ளது. சில சந்திரவட்டக்கற்களில் மகரம், கிபிகி போன்ற விலங்கு வடிவங்களும் அன்னம் போன்ற பறவை வடிவ அலங்காரமும் காணப்படுகின்றது. சந்திரவட்டக்கல்லும் படிவரிசையும் தொடுக்கும் இடத்தில் ஒன்றரை அடி அகலமான நிரையொன்று சேர்க்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆரம்பிக்கும் கொடி பின்னல் அலங்காரம் மத்தியில் உள்ள தாமரை மலரைச் சுற்றி செல்லும் விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 
பொதுவாக இக்காலச்சந்திரவட்டக்கல்லில் செதுக்கல்கள் அதிகமாகவும் கரடுமுரடானதாகவும் உள்ளன. இதனால், கண்டியகால சந்திரவட்டக்கல்லானது வெறும் அலங்காரவடிவமைப்பாகவேயுள்ளது. முன்னைய இரு காலப்பகுதிக்குரிய சந்திரவட்டக்கல் போன்றல்லாது அர்த்தமற்ற வெறும் கவர்ச்சிக்கு செதுக்கப்பட்ட அலங்கார உருக்களாகவே இவை உள்ளன. எனவே கண்டியகால சந்திரவட்டக்கல்லில் கலைவனப்பு, அலங்கார வடிவமைப்புத்திறன் என்பன மரணித்துவிட்டதாக கலையாசிரியர்கள் கூறுகின்றனர். 
கண்டியகால சந்திரவட்டக்கல் காணப்படும் இடங்களாக களனிவிகாரை, தலதாமாளிகை, ஹங்குராங்கெத்த பொத்துல் விகாரை, தெகல்தெறுவா விகாரை, கண்டி விஷ்ணு தேவாலயம் போன்ற இடங்கள் உள்ளன. 


கண்டி தலதாமாளிகைச் சந்திரவட்டக்கல்

    தலதாமாளிகை உருவச்சிலை வீட்டுக்கு உட்புகும் படிகளில் அடிப்பாதத்தில் உள்ள சந்திரவட்டக்கல்லலில் விலங்கினங்கள் காணப்படுகின்றன. அதன் மேற்பகுதியில் பதினாறு சிங்கங்களின் உருவங்களைக் கொண்ட ஒரு வரிசை காணப்படுகின்றது. அடுத்து அன்னங்களைக் கொண்ட ஒருவரிசையொன்றும் காணப்படுகின்றது. சந்திரவட்டக்கல் மத்தியில் பெரியதோர் தாமரைப்பூ உள்ளது. அதன் இரு பக்கமும் இரு பறவையுருக்கள் செதுக்கப்பட்டுள்ளன. சந்திரவட்டக்கல்லின் இருபுறமும் கொம்பு போன்ற இரு அலங்காரம் செதுக்கப்பட்டுள்ளது. இதன் உச்சியில் வட்டவடிவான கற்செதுக்கல் உள்ளது. இதில் பூவிதழ், அரும்பு, தாமரை இதழ் ஆகியவற்றால் செதுக்கப்பட்டுள்ளது. 
கண்டி விஷ்ணு தேவாலய சந்திரவட்டக்கல்
இது தொடர் கொடி வேலை அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சந்திரவட்டக்கல்லாகும். அதன் மத்தியில் பூவிதழ் தொடர் இதழ்கள் என்பவற்றால் அலங்கரிக்கப்பட்ட தாமரைப் பூவொன்றின் வடிவத்தைக் கொண்ட செதுக்கல்களைக் கொண்டுள்ளது. சந்திரவட்டக்கல்லின் மேற்பகுதியின் உச்சியில் வட்டவடிவமான செதுக்கலைக் காணலாம்.

காவற்கல் (முறகல)

    அரண்மனைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றின் வாசலில் உட்செல்லும் படிக்கட்டின் இரு புறமும் கைபிடிக்கு முன்னால்; காணப்படும் செதுக்கல் கொண்ட கற்கள் காவற்கற்கள் எனப்படும். இதன் கீழ்ப்பகுதி சதுரவடிவிலும் மேற்பகுதி அரை வட்டவடிவிலும் உள்ளன. இத்தூணாது அது பயன்படுத்தப்பட்டிருக்கும் கட்டிடத்தின் பாதுகாப்பிற்கும், சிறப்பை எடுத்துக்காட்டவும் படிக்கட்டின் பாதுகாப்பிற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மிகப் பழைய காவறகற்களில் செதுக்கல்; உருவங்கள் இன்றி செவ்வக வடிவில் அமைக்கப்பட்டது. பின்னரே, கலசம், பாம்பு, கணங்கள், குள்ளர் உருவங்கள், துவாரபாலகர் உருவத்தைக் கொண்ட செதுக்கல் வடிவங்கள் செதுக்கப்பட்டன. இவை கலைநயமாக அரைப்புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. முற்காலத்தில் காவற்றூண்களில் உள்ள உருவங்கள் கலவைச் செதுக்கலினால் ஆக்கப்பட்டமையால் அவை பிற்காலத்தில் சேதத்திற்குள்ளாகி இருக்கலாம் எனப் பரணவிதான நம்புகிறார். எப்படியாயினும், பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கற்றூண்களில் பலவித செதுக்கல்களைக் காணலாம். அநுராதபுரம் பொலனறுவைக்காலங்களில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட காவற்கல் பின்னர் செங்கல் சாந்து போன்ற ஊடகங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. 
    புன்கலச (நிறைகுடம்), முயலகன், நாக உருவங்கள் (ஐந்து தலை, ஏழு தலையுடைய நாக உருவங்கள்) நாகராஜ உருவங்கள் (குடித்தலைவர்கள்), குடித்தலைவரும் அவரது மனைவியும் என்று பல செதுக்கல்கள் பொழியப்பட்டு காவற்கற்கள் வளர்ச்சியடைந்தது. 
காவற்கற்களில் பாம்பின் உருவம் கொண்ட காவற்கல் வைக்கப்பட்டால் என்றும் நீர்நிறைந்திருக்கும் என்பது ஐதீகமாகும். இதனால் குளக்கட்டு வாசலில் இவை வைக்கப்பட்டன. இவற்றை அநுராதபுரம் குட்டம் பொக்குணவில் காணலாம். 
காவற்கற்கள் காணப்படும் இடங்கள் சில: 
நிறைகுடத்துடனான கவற்கல்: குட்டம் பொக்குண, இசுறுமுனியா
நாகவடிவ காவற்கற்கள்: அவுக்கண விகாரை, மெதிரிகிரிய வட்டதாகே
முயலகன்களைக் கொண்ட காவற்கற்கள்: இசுறுமுனியா, அபயகிரி விகாரை, 1ம் விஜயபாகு மன்னன் அரசமாளிகை வாசல் (சங்கநிதி, பத்மநிதி) 
நாகவடிவத்தைக் கொண்ட காவற்கற்கள்: ரத்தின பிரசாதய, கபராராமைய
சோடி உருவங்களைக் கொண்ட காவற்கற்கள் - மாசென் அரண்மனை கிழக்கு திசையின் காவற்கல், ருகுணவின் தெமட்டல் விகாரை.   

அநுராதபுரக்கால காவற்கற்கள்

அனுராதபுரத்தில் உள்ள காவறக்;கற்களாக பின்வருவன உள்ளது. 
1. அநுராதபுர அரசமாளிகை வயில் காவற்கல் - துவாரபாலகர்
2. ரத்தின பிரசாத காவற்கல்
3. தூபராமைக்கு அருகில் உள்ள மகாமேகவன தோட்டத்தில் உள்ள காவற்கல்.
4. இசுறுமுனியா விகாரை காவற்கல்

    அநுராதபுர அரசமாளிகை வாயிலில் அமைந்துள்ள விஐயபாகுமன்னன் காலத்து காவற்சிலையானது துவாரபாலகர் வடிவமுடையதாகும். பௌத்தகோயில் வாயிலின் இருமருங்கிலும் மற்றும் இந்துக் கோயிலின் இராஐகோபுரத்தின் இருமருங்கிலும் இன்றும் இவ்வடிவத்தினைக் காணமுடியும். உண்மையான ஒரு காவலாளியின் உயிர்த்துடிப்பும் தோற்றமும் கலைவனப்பும் கொண்ட சிற்பமாகவுள்ளது. துவாரபாலகரின் கிரீடத்தின் பின்புறத்தில் பாம்பின் உருவமும் கையில் காவலுக்குரிய கொட்டனும் காதில் காதணியும் கழுத்தில் மார்பை அழகு செய்யும் கழுத்தணிகளும் ஆடை அணிகளும் கொண்டுள்ள இச்சிற்பத்தில் சிற்பியின் கருத்துக்கள் நிரம்பவும் பிரதிபலிக்கின்றது. 
    அடுத்து அனுராதபுரத்தில் மிக அதிகமாகக் காணப்படுவது நாகவடிவ  காவற்றூண்களாலும். ரூவன்வலிசாயாவுக்கு ஏறும் படிவரிசைகளுக்கு அண்மையில் நாக காவற்றூண்களைக் காணலாம். நிறைகுடம் கொண்ட காவற்றூண்களும் அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பழைய காவற்றூண் தொகுதியுடன் சேர்ந்து கொள்கின்றது.
    இவை 1ம் நூற்றாண்டில் காணப்படும் காவற்றூண்களில் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. அத்தகைய காவற்றூண் ஒன்றை அனுராதபுரத்தின் தொல் பொருள் திணைக்களத்திற்குரிய நூதனசாலையில் நாம் காணலாம். 
    இசுறுமுனியாவில் காணப்படும் காவற்றூணில் குள்ளன் ஒருவன் சங்கொன்றில் இருந்து வெளிப்படும் காசுக் கொடியைப் பற்றிப் பிடித்திருப்பதைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.  இசுறுமுனியாவிலுள்ள காவற்றூண் செதுக்கலில் இருந்து குபேரனின் சங்கினையும் பதுமைகளையும் கொண்ட புதையலை வெளிக்காட்டுவதாக கலாநிதி பரணவிதான கூறுகிறார். இந்தியாவின் காவேரிப் பட்டினம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சங்கு பதுமை உருவங்களிலும் குள்ளர்கள் சங்கிலிருந்தும் பதுமம் ஒன்றிலிருந்தும் இழுபட்டு வரும் காசுக்கொடிகளை பிடித்துக் கொண்டிருக்கும் முறை காட்டப்பட்டுள்ளது. 
காவற்கல் செதுக்கல் வடிவங்கள் அனைத்தினதும் ஒன்று திரட்டாக வாயிலோனைக் கொண்ட காவற்கல்லினைக் குறிப்பிடலாம். அலங்காரம் மிக்க இக் காவற்கல்லை மகா மேகவனத்தில் உள்ள ரத்னபிரசாதயவில் காணலாம். காவற்கல்லில் உபயோகித்த புன்கலசம், நாகவடிவம், பகிரவ வடிவம் என்பன ஒன்று சேர்ந்து நாகராஐதுவாரபாலகர் வடிவம் உருவாக்கப்பட்டது. 
இது 3ம் நூற்றாண்டு ஆட்சி செய்த கனிஷ்டதிஸ்ஸ அரசன் காலத்தில் குணராம தேவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது என நூல்களில் குறிப்பிட்டுள்ளது. மிகச்சிறந்த காவற்கல் இரத்தினபிரசாதய ஆகும். இது அநுராதபுரக் காலத்திற்குரியது. இக் காவற்கல்லின் கீழ்ப்பகுதி சதுர அமைப்பைக் கொண்டிருப்பதுடன் மேற்பகுதி வட்டமான வடிவத்தையும் கொண்டுள்ளது. காவற்கல்லின் சதுரப்பகுதியில் இரு புறத்திலும் கீழிருந்து மேலாக சிறிய இரு தூண்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது இரு மகரங்கள் காணப்படுகின்றன. இவ்விரண்டு மகரத் தோற்றத்தில் இருந்து வெளிப்படும் செதுக்கல்களினால் அரை வட்டமான மேற்பகுதி மூடப்பட்டுள்ளது. காவற்கல்லின் ஒரு பகுதியில் இருந்து கீழ்நோக்கி வரும் தோரணத்தில் அலங்காரமும் தூணின் உச்சியில் உள்ள மகரத்தின் தலைவரை பரவியுள்ளது. காவற்கல்லின் மத்தியில் மூவகை வளைவுகளையுடைய (திரிபங்க நிலை) நாகராஜ அரசனின் உருவமொன்றுள்ளது. இந்த உருவமானது ஒரு கையில் தென்னம் பூக் கொப்பொன்று போன்ற ஒன்றையும் மற்றக் கையால் நிறைகுடம் ஒன்றையும் பிடித்துக் கொண்டுள்ளது. இது செல்வச் செழிப்பை எடுத்துக் காட்ட செதுக்கப்பட்டுள்ளது. நாக அரசனின் ஒரு பக்க காலின் அருகே மட்டும் பைரவ உருவமொன்றுள்ளது. நாகராஜ அரசனின் தலைக்குப் பின்னால் படமெடுத்த பல தலை நாக பாம்பின் உருவம் கொண்ட திருவாசியும் காணப்படுகின்றது. நாக உருவமானது பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆடை, ஆபரணங்களின் மிக நுட்பமான பகுதிகளும், உடலைத் தெளிவாகக் காட்டியும் உள்ளது. இக் காவற்கல் இந்தியாவின் குப்த சம்பிரதாயத்தின் அம்சமென ஆய்வாளர் பரணவிதான கூறுகிறார். 
இச் செதுக்கல்கள் செம்மையாக இல்லாதிருப்பதுடன் எளிமையாகவும் உயிர்த் துடிப்புள்ளவையாகவும் உள்ளன. ஆனால் காலத்திற்கு காலம் வளர்சியடைந்த காவற்றூணின் வடிவம் அதிலுள்ள செதுக்கல்கள் படிப்படியாக பொலனறுவை தம்பதெனிய, கம்பளை, கண்டி காலங்களின் போது பொலிவிழந்து போயின என அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தெரியவருகின்றது. 


பொலனறுவைக்கால காவற்கல்

    பொலனறுவைக்காலச் சந்திரவட்டக்கற்களின் அடிப்பாகம் சதுர வடிவாயும் மேல் வடிவம் அரை வட்ட வடிவையும் உடையது. பொலனறுவைக் காவற்கல்லின் முன்பக்கம் எளிமையான செதுக்கலினால் செதுக்கப்பட்டுள்ளது. இக்கால காவற்கல்லில் அனுராதபுரக்காலத்தைப் போன்று மூவகை வளைவுடன்; தலையில் ஏழு நாக பாம்புகளுடன் காணப்படும் நாகராஐவடிவம் உள்ளது. ஒரு கையில் நிறைகுடமும் மற்றைய கையில் தென்னம்பூ போன்ற ஒன்றையும் கொண்டிருக்கின்றது. இதனை அலங்கரிக்க தொங்கும் காதுகள் நீண்ட கைகள் ஆபரணங்கள் தொங்கும் இடுப்புப்பட்டி உடம்புடன் ஒட்டிய சுருக்கங்கள் கொண்ட ஆடைகள் என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. காவற்கல்லின் அடிப்பாகத்தில் பைரவனின் உருவம் காணப்படுகின்றது. ஆனால் சில காவற்கல்லில் பைரவ உருவங்களை விட வேறு உருவங்களும் உள்ளன. 

பொலனறுவையில் காவற்கற்கள் காணப்படும் இடங்களாக பின்வரும் இடங்கள் உள்ளன.
1. வட்டதாகே காவற்கல்
2. இலங்காதிலக காவற்கல்
3. திவங்க பிலிமகே காவற்கல்

பொலனறுவை வட்டதாகே காவற்கல்
    பொலனறுவை வட்டதாகேயின் பிரதான வாயிலின் மேல்படி வரிசையின் இருபுறமும் உள்ள காவற் செதுக்கல்கள் செம்மையாகவும் எளிமையாகவும் உள்ளன. அவை அநுராதபுரக்காலச் செதுக்கலை நினைவுபடுத்துகின்றன. ஏனைய காவற்கற்களில் உள்ள செதுக்கல்களைவிட புதுமையான செதுக்கல்கள் கொண்டும் காணப்படுகின்றன. காவற்கல்லின் செதுக்கலில் கரடுமுரடான தன்மை காணப்படுக்கின்றது. பொதுவாக காற்கல்லின் எளிமைத் தன்மை சற்றுக் குறைவாகவுள்ளது. பொலனறுவைக் காலத்தில் இந்தியாவின் கூடிய செல்வாக்குக் காரணமாக பல்லவ கலையம்சங்கள் அதிகமாக காணப்பட்டனவென்றாலும் பொலனறுவை நிர்மாணங்களில் காவற்கல் செதுக்கல்கள் முதலிடம் வகிக்கின்றன. 


கொரவக்கல்  (செட்டைக்கல் / கைபிடிவரிசை) 

     

    வாசல் அலங்காரத்திற்காகவும் படிவரிசையின் பாதுகாப்பிற்காகவும் பிடித்து ஏற இறங்க சுலபமாக இருப்பதற்காக படிகளின் இருபுறமும் ஆதாரமாக அமைக்கப்பட்டுள்ள பெரிய கற்கிராதிகள் ஆகும். இதனை கரவக்கல, கரஅத்கல, கையொருகல என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டது. கருங்கல், செங்கல், சுண்ணாம்புக்கல் போன்றவற்றால் இது அமைக்கப்பட்டுள்ளது. 
                    இவை முதலில் படிக்கட்டின் பாதுகாப்புக்காகவும் ஏறிச் செல்ல உதவும் கைப்பிடியாகவும் பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. எது எப்படியாயினும் படிவரிசையில் பயணம் செய்வோருக்கு படிவரிசைகளையும்  மேடையையும் வேறுபடுத்தும் ஒரு வேலியாகவும் பாதுகாப்பளிக்கிறது. கைபிடியின் வெளித்தோற்றம் அதன் செதுக்கல் வேலைப்பாடுகளும் காலத்திற்கு காலம் மாற்றமடைந்தது.  
                ஆரம்பத்தில் இது ஒரு நாளிலேயே உருவாக்கப்பட்டதென்பது பரணவிதானவின் நம்பிக்கையாகும். முதலில் உருவாக்கப்பட்ட அவ்வகைக்கற்கள் எதுவும் இல்லாமையால் மிகப்பழைய வகையான இக் கல்லின் உண்மை உருவம் எதுவென கூறுவது சிரமமாகும். 

                            கொரவக் கல்லில் மகர வேலைப்பாடு இடப்பட்டிருப்பதே கலைநயமானது. இதில் மகரம் இருப்பது பின்பகுதியில்; காணப்படும் தூணின் மேலாகும். அங்கு மகரத்தின் வாயில் இருந்து வெளியேறும் நீரலை அல்லது தீச்சுடர் போன்ற துதிக்கையொன்றின் அமைப்பில் வளைந்து மேற்பகுதி நுணுக்கமான அமைப்பில் செதுக்கியிருக்கும் விதம் உன்னத கலைப்படைப்பாக உள்ளது. ஆரம்ப காலத்தில் மகர உருவம் பயன்படுத்தியுள்ளதுடன் கம்பளை, கண்டியுகத்தில் கஐசிங்க உருவத்திற்கு அது மாற்றமடைந்துள்ளதையும் காணலாம். மகரத்தின் வாயிலிருந்து வெளிவரும் கொடியொன்றுடன் கூடிய இவ் வகைக் கல்லை தூபராமையிலுள்ள சிலை வீட்டிலும் காணலாம். கண்டிக் காலத்தில் மகரவாயில் இருந்து வெளிவரும் விதத்திலான கொடியிலைக்குப் பதிலாக யானை தும்பிக்கை கொண்ட கைபிடிகள் நிர்மாணிக்கப்பட்டன. தம்பதெனியா ரஜமகா விகாரையின் தூபகர வாயிலில் உள்ள கைபிடியில் மகர உருவுக்குப் பதிலாக யானை உருவம் இடப்பட்டுள்ளது. இலங்காதிலக விகாரையிலும் கடலாதெனியா விகாரையிலும் உள்ள கைபிடிகள் இதற்கு சான்று பகர்கின்றன. 
    ஆரம்பத்தில் கைபிடிக்கு கீழே உள்ள கற்றகட்டுப் பகுதியில் உட்புறம் வெளிப்புறம் எந்தவித செதுக்கல் வேலைப்பாடுகளும் இன்றி காணப்பட்டது. ஆனால், பிற்காலத்தில் அவை செதுக்கல் வேலைப்பாடுகள் கொண்டதாக மாறியது. பின்னர், இந்த பகுதியில் 'நரசிங்க' 'கஐசிங்க' கேஷர சிங்கம்' என்ற உருவங்களின் செதுக்கப்பட்டது. கொரவக்கல்லின் பின்பகுதியில் உள்ள தூணின் உச்சியில் புங்கலசம் காணப்படுகின்றது. இது செழிப்பைக் குறிக்கின்றது. கொரவக்கல் முடியுமிடத்தில் காவற்கல் உள்ளது. 


    அபயகிரி கைபிடியில் 'புன்கலச' (நிறைகுடம்), இசுறுமுனியா கைபிடி வரிசையில் யானை உருவங்களும், பொலனறுவை வட்டதாகேயில் சிங்க உருவமும் இடப்பட்டிருக்கின்றன. பொலனறுவை இலங்காதிலக சிலைமனையின் வாயில் அருகே உள்ள கைபிடியில் கொடியிலைக்கு கீழே உட்பகுதியில் குடித்தலைவனின் மனைவியும் பெண் குள்ளர்கள் இருவரும் செதுக்கப்பட்டுள்ளன.

    அநுராதபுரயுகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிர்மாணம் பொலனறுவை யுகத்தில் கல்லை ஊடகமாகப் பயன்படுத்தி நிர்மாணிக்ப்பட்டது. கம்பளை, கண்டியுகங்களில் அதனை மாற்றி செங்கல்லையும் சாந்தையும் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டது.
    அநுராதபுர இராணி மாளிகையின் கைபிடி சிறப்பான கலை வேலைப்பாடுகள் அதிகம் கொண்டதாகக் காணப்படுகிறது. வேலுவனராமய,கிரிவிகாரை,இலங்காதிலக விகாரை, வட்டதாகே, பத்தசீமா பிரசாதய, ராஜவேஷீபுஜங்க மண்டபம் ஆகியவற்றில் பொலனறுவை காலத்து கைபிடிகள் காணப்படுகின்றன.  
படிக்கட்டின் அளவிற்கேற்ப கொரவக்கல்லின் அளவும் தீர்மானிக்கப்பட்டதுடன் படிக்கட்டின் பலத்தை அதிகரிக்க கொரவக்கல் பயன்படுத்தியமை அக் கலைஞர்களின் தொழில்நுட்ப அறிவின் தன்மையை விளக்குகின்றது. 




படிவரிசை (சோபனபந்திய)

    கடவுளுக்குரியவைகள் எப்போதும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதைக் குறியீட்டில் உணர்த்தும் விதமாக பௌத்தர்களின் புனித வணக்கஸ்தலங்களாகக் காணப்படும் கட்டடங்கள் எப்போதும் பல படிக்கட்டுக்களுடன் கூடிய உயர்ந்த இடங்களாகவே காணப்படுகின்றன. இந்த புனித வணக்கத்தலம் ஒன்றில் எட்டுப் படிகள் காணப்படும். அது பௌத்த மத்தின் எட்டுவிதமான பௌத்த கொள்கைகளை (ஆர்ய அஷ்டாங்கிக்க மார்கய) நினைவுபடுத்துவதாக செனரத் பரணவிதான கருத்து தெரிவிக்கின்றார்.  
இப்படிக்கட்டுக்களைச் சிற்பவேலைப்பாடு உள்ளவை, சிற்ப வேலைப்பாடு அற்றவை என இரண்டாகப் பிரிக்கலாம். செதுக்கல் வேலைப்பாடு அற்றபடிகள் மலைகள், பாதைகள்,பாறைகள்,குன்றுகள் ஏறுவதற்கு பயன்பட்டன. வணக்கத்தலங்கள் வரலாற்று ரீதியான கட்டடங்களிலும் உள்ள படிகள் செதுக்கல் வேலைப்பாடுகள் கொண்டிருந்தன. தாகபைகள், சிலைக்கூடம், போதிமனை, தர்மசாலை, குருமார் தங்குமிடம், உபதேசமண்டபம் போன்றன பல படிக்கட்டுக்கள் கொண்டவை. 
படிக்கட்டுக்களின் செங்குத்தான பகுதியில் செதுக்கல்கள் உள்ளன. இவற்றில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் உள்ளத்தைக் கவரும் வண்ணம் நுட்பமான முறையில் செதுக்கப்பட்டு காணப்படுகின்றன. இவற்றில் வாமன உருவம், பைரவ உருவம், இலை தாமரை வடிவங்கள் என்பன செதுக்கப்பட்டுள்ளன. 
வாமன அல்லது பைரவ வடிவங்களே அதிகமான படிகளில் காணக்கூடியதாகவுள்ளன. இவை குட்டையான உருவமாயும் கை கால்கள் சிறியதாயும் தொங்கும் உதடுகளுடன், கழுத்தில் மாலைகளுடன் பெரிய முன்தள்ளிய வயிற்றுடன் படியின் முழுப்பாரத்தையும் பல்வேறு விதமாகத் தாங்கிக் கொண்டிருப்பது போன்ற இச்சிற்பம் செதுக்கப்பட்டிருக்கும். மிகிந்தலைப் படிகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். அநுராதபுர மகாசென இராணி மாளிகையின் படிகளில் வஜ்ஜிர, முயலக வடிவங்கள் மோடிப்படுத்தப்பட்டு காணப்படுகின்றன. கண்டி விஷ்ணு ஆலயத்தின் படிக்கட்டுக்களில் உள்ள செங்குத்துப் பரப்புகளில் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட அழகிய கொடியிலை செதுக்கல்கள், எல்லாப் படிகளிலும் மத்தியில் இருந்து இரு புறமும் பரவிச் செல்லும் விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

படிவரிசையில் உள்ள வாமன உருவம்


நிறைகுடம் (புன்கலச)


    நிறைகுடம் பூரண கலசம் என்பன இதைக் குறிக்கும். அது சௌபாக்கியம், அதிஷ்டத்தைக் குறிக்கும் அடையாளமாகும். இவை வணக்கஸ்தலங்கள், குளங்கள் போன்றவற்றின் படிக்கட்டின் இருபுறமும் துவாரபாலகரின் கைகளிலும் காணப்படுகின்றது. கலசத்தின் வாய்ப்பகுதியில் எட்டுத் திசைகளையும் குறிக்கும் வகையில் எட்டுத் தாமரை இதழ்களும் நடுவில் தாமரையும் காணப்படுகின்றது. கலசமானது தாமரை மலரின் மேல் வைக்கப்பட்டதைப்போல் செதுக்கப்பட்டுள்ளது. கலசத்தில் மூன்று கோடுகள் இடப்பட்டுள்ளது. இலங்கையின் மிகச்சிறந்த கலசம் அநுராதபுரம் குட்டம் பொகுனவில் உள்ளது. இங்கு மிகநுட்பமான முறையில் அமைக்கப்பட்ட 10 கலசங்கள் உள்ளன. 
    அநுராதபுரத்தின் காவற்கற்களிலும் வாகல்கட தூண் செதுக்கல்களிலும் புன்கலசம் அரைப் புடைப்பு முறையிலும் சிறு புடைப்பு முறையிலும் செதுக்கப்பட்டுள்ளன. அபயகிரி கைபிடியில் இது அலங்கார வேலைப்பாட்டுக்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அநுராதபுரம் குட்டம் பொக்குணவில் பாரிய அளவிலான முழப்புடைப்பு முறையில் நிர்மாணிக்கப்பட்ட புன்கலசவைக் காணக்கூடியதாக இருக்கிறது. 








கருத்துகள்