அனுராதபுர காலத்தின் பிற்பகுதியில், சோழ படையெடுப்பு இலங்கையை சோழர்கள் ஆட்சி புரிந்தனர். இலங்கைத் தீவின் முக்கிய பகுதிகள் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அவர்களின் ஆட்சியின் கீழே தான் இருந்தது. இலங்கையினை சோழர்கள் மும்முடி சோழ மண்டலம் என அழைத்ததாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பொலன்னறுவை சோழர்களின் தலைநகரமாக இருந்தது. அவர்கள் பொலனறுவையை ஜனநாதபுரம் என அழைத்தனர். இலங்கை வரலாற்றில் பொலன்னறுவை இரசதானிக் காலத்தின் தொடக்க ஆண்டுகள் சோழர் ஆட்சியுடன் தொடங்கியது என்றே கூறலாம்.
சோழ படையெடுப்பாளர்கள் திராவிட கட்டிடக்கலை படி இந்துக் கோவில்களைக் கட்டியிருந்தனர். தமிழ்நாட்டில் பெரிய தாஞ்சை பிரகதிஸ்வரர் கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழ மன்னன் பொலன்னறுவையில் ஐந்து சிவாலயங்களை திராவிட கட்டிடக்கலை படி கட்டியிருந்தனான்.
பொலனறுவை காலத்தில் இந்து கோவில்களில் ஏராளமான வெண்கல சிலைகள் நிறுவப்பட்டிருந்துள்ளன. இந்த சிலைகளின் சிற்ப பாணி அமைப்பு மற்றும் நுட்ப அலங்காரங்கள் தென்னிந்திய சோழ சிற்பங்களை ஒத்திருக்கின்றன. மிகப் பழைய வார்ப்பு தொழிநுட்பத்தில் செய்யப்பட்ட இந்துச் சிற்பங்களில் சில தென்னிந்தியாவிலும் செய்யப்பட்டவை என்று நம்பப்பட்டது. பொலனறுவைச் சிவாலயங்களில் கண்டெடுக்கப்பட்ட வெண்கலச் சிற்பங்களை நீங்கள் பொலனறுவை மற்றும் கொழும்பு தேசிய நூதனசாலைகளில் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறு இந்த 5 சிவாலயங்களிலும் கண்டெடுக்கப்பட்ட வெண்கலச் சிற்பங்களில் சிலவற்றைப் பற்றி கீழே தரப்பட்டுள்ளது.
நடராஐர் சிற்பம்
இந்து சமயத்திற்குரிய சிலைகளில் ஒன்றான இந்த நடராஜர் சிலை முழுமுதற் கடவுளான சிவனது தாண்டவ நடனத்தினை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. இலங்கையில் சோழர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஐந்து சிவாலயங்களில் இருந்தும் ஆறு நடராஜர் திருவடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வெண்கலச் சிற்பங்கள் யாவும் 11ம் நூற்றாண்டிற்குரியனவாகும். இவற்றில் 1ம்; சிவாலயத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடராஜர் வடிவமே எல்லாவற்றிலும் மிகப் பெரியதும் அழகானதும் ஆகும். இதனை தற்போது கொழும்பு நூதனசாலையில் நாம் காணலாம்.
சோழர் சிற்பக்கலையின் மிகப் பழமை வாய்ந்த நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்த வெண்கலச் சிற்பமானது பிரபஞ்சத்தின் இயக்கத்தினை குறியீடுகள் மூலம் எடுத்துக் காட்டுவதாகவுள்ளது. அதாவது, ஆடற் தெய்வமாகிய நடராஐரின் ஆனந்த தாண்டவத்தின் மூலம் உலகின் ஆரம்பம், முடிவு என்பவற்றை விளக்குவதாக உள்ளது. பிரபஞ்ச இயக்கமானது ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகியன மூலமே நடைபெறுகின்றன. ஆகவே இவற்றினை எடுத்துக்காட்டும் விதமாக இச்சிற்பத்தில் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளமையே இதன் சிறப்பம்சமாகும்.
இந்த சிற்ப உருவத்திலே நான்கு கைகள் காணப்படுகின்றன. இதில்
1. படைத்தல் - வலது கையில் உடுக்கு
2. அழித்தல் - இடது கையில் அக்னி
3. காத்தல் - வலது கையில் அபயமுத்திரை
4. அருளள் - இடது கையினால் கஜஹஸ்த முத்திரை
5. மறைத்தல் - முயலகனை மிதித்தலும் (முயலகன் அறியீனத்தின் குறியீடு)
பிரபஞ்சத்தை எடுத்துக் காட்டும் குறியீடாக, முழு உருவத்தையும் சுற்றி வட்ட வடிவமாக திருவாசி அல்லது தீச்சுவாலை என்னும் சோதிப்பிளம்பு வளையம், அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இவ்வளையமானது நடராஜர் காலூன்றி நிற்கும் பத்மாசன பீடத்தின் இருபக்கமும் அமைந்துள்ள மகரத்தின் வாயில் இருந்து ஆரம்பிப்பதைக் காணலாம்.
தலைமுடியின் வலப்பக்கத்தில் கங்கையும் இடப்பக்கத்தில் பிறையும் பாம்பும் உள்ளது. சிற்பத்தில் அணிகலன்களாக வலது காதில் ஆண்களின் குண்டலமும் இடது காதில் பெண்களின் தோடும் உள்ளது. இது ஆண், பெண் கடந்த அர்த்தநாரீஸ்வரர் நிலையை எடுத்துக் காட்டுகின்றது. கழுத்தில் கபால மாலை அணிந்துள்ளமையானது ஐந்தொழில்களும் மாறி மாறி நடைபெறுகின்றது என்பதைக் குறிப்பதாகவுள்ளது. அத்துடன் உருத்திராட்சமானது பக்தர்கள் மீது சிவன் மிகுந்த அன்பு கொண்டவர் என்பதைக் குறிப்பதாகவுள்ளது.
இவ்வாறு நான்கு கைகளுடனும் கவர்ச்சியான உடலமைப்புடனும் திரிபங்க நிலையில் படைக்கப்பட்ட இச் சிற்பத்தின் அங்கங்கள் மூலம் மொத்தமாக 13 குறியீட்டு அம்சங்கள் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. இந்து சமயத்தின் ஆழமான கருத்துக்களை நடராஐர் வடிவத்தின் குறியீட்டு அமசங்களின் மூலம் சிற்பி வெளிப்படுத்திக் காட்டியிருப்பது சிறப்பானதாக காணப்படுகிறது.
கருத்துகள்