வாகல்கடம்
தாதுகோபத்தின் நாற்றிசை வாசல்களுக்கும் எதிராக அண்டத்துடன் அண்டியதாக அதன் அடித்தளப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் செதுக்கல் வேலைப்பாடு கொண்ட அமைப்பே வாகல்கடமாகும். இதனை புராதன காலத்தில் கல்வெட்டுக்களில் ஆயக்க எனவும் மகாவம்சத்தில் ஆதிமுக, என்ற பெயரிலும் அழைத்தனர்.
இந்த கலைநயமிக்க கட்டிட அம்சத்திற்குரிய சிறப்பம்சம் இந்த வாகல்கட அமைப்பானது இலங்கையில் உள்ள தாதுகோபங்களில் மட்டுமே காணப்படுகின்றது. வேறு நாடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் தூதுகோபங்களில் இந்த அமைப்பினை காணமுடியவில்லை. இந்தியாவின் சாஞ்சி தூபியின் நான்கு வாசல்களிலும் அலங்கார வேலைப்பாடமைந்த தோரணங்கள் காணப்படுகின்றன.
இதைப் போலவே இலங்கையில் தாதுகோபத்திற்கு செல்லும் நான்கு திசைகளிலும் உள்ள வாசல்களுக்கு நேராக வரவேற்பு தோரணம் போல் அலங்கார வேலைப்பாடு கொண்ட இந்த வாகல்கடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
வாகல்கடங்கள் தாதுகோபத்தின் அழகுக்காகவும் முக்கியமாக தாதுகோபத்தினது அண்டத்தினுடைய பலத்திற்காகவும் அமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இந்த வாகல்கடங்கள் அடிப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி செங்கல்லாலும் ஆக்கப்பட்டதை அவதானிக்கலாம். இவ் வாகல்கடம் அமைக்கும் வழக்கம் எப்போது ஆரம்பமானது என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை.
அநுராதபுரகாலத்தில் மிகிந்தலை கந்தகசைத்திய மற்றும் மிரிசவெத்தி தாதுகோபம், ரூவன்வெலிசாயா தாதுகோபங்களிலும் பொலனறுவையில் ரன்கொத்விகாரைத் தாதுகோபம் போன்றவற்றிலும் மிகப் பழைய வாகல்கடங்கள் காணப்படுகின்றது. இதில் மிகிந்தலை கந்தகசைத்திய வாகல்கடமே மிகச் சிறந்த வாகல்கடமாகும்.
வாகல்கடத்தின் கீழ்ப்பகுதி கருங்கற்களாலும் மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. வாகல்கடத்தின் அமைப்பினைப் பார்ப்போமானால் வாகல்கடம் பிரதானமாக மூன்று பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படுகிறது. வாகல்கடத்தின்; இரு பக்கமும் அழகிய செதுக்கு வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் உள்ளன. இத் தூண்களில் நிறைகுடத்தில் இருந்து வெளிவரும் கொடிகள் போன்று செதுக்கப்பட்ட ஐPவ விருட்சம், கற்பக விருட்சம் மற்றும் நாக உருவங்கள், தேவதை உருவங்கள் என்பன காணப்படும். இத் தூண்களின் உச்சியிலே மிருக உருவங்கள் காணப்படும். இம்மிருக உருவங்கள் நான்கு திசைகளைக் காட்ட உருவாக்கப்பட்டதாக கருதப்படுகின்றது. அதாவது யானை உரு – கிழக்கையும், குதிரை உரு – மேற்கையும், சிங்க உரு - வடக்கையும், எருது உரு – தெற்கையும் குறிப்பதாக உள்ளது.
அடுத்து கல்லால் ஆன செவ்வகவடிவ அடிப்பக்கத்தைப் பார்ப்போம். அதன் மத்திய பகுதி முன்துருத்தியவாறு காணப்படும். இதில் வரி வரியாக அழுத்தமாகவும், நுட்பமாவும் அமைக்கப்பட்ட செதுக்கல் வேலைப்பாடுகளை காணமுடியும். இச் செதுக்கல் வேலைப்பாடுகளில் யானைச் செதுக்கல், பேகட அமைப்பு, வாமன உருவம், லியவெல செதுக்கு வேலைப்பாடு என்பன காணப்படுகிறது. வாகல்கடங்களின் இந்த அடிப்பகுதிகள் முழுவதும் கருங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கும்.
அடுத்து மேற்பகுதியில் 3 விமானங்கள் உள்ளது. இந்த விமானங்கள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது இந்த 3 விமானங்களில் மத்தியில் உள்ள விமானம் பெரிதாகவும் மற்றைய இரு பக்கமும் உள்ளவை சிறியதாகவும் காணப்படும். விமானங்களினுள் புத்தரின் உருவங்கள் தேவ உருவங்கள் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இன்று காணப்படும் வாகல்கடங்களில் சில மேற்பகுதி அழிந்துவிட்டன. இதனால் வாகல்கட அமைப்பில் மேல்பகுதி பற்றிய விடயங்கள் அறிதல் கடினமாக உள்ளது. ஏனென்றால், அவை செங்கற்களால் கட்டப்பட்டமையால் உடைந்து சிதைவடைந்துள்ளது.
அநுராதபுர மிகுந்தலையில் எழுந்த அதிகமான தூபிகளில் வாகல்கடம் முன்பாக கல்லால் செய்யப்பட்ட பூசைப் பீடம் ஒன்றும் பிற்காலத்தில் கட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பூக்களை வைத்து வழிபட்டனர். இது மலர்மேடை அல்லது பூப்பீடம் எனவும் அழைக்கப்பட்டது.
கருத்துகள்